வாலாஜாபாத்: கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் 400 மரக்கன்றுகள் நடப்பட்டன. வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கம் ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, மரக்கன்றுகள் நடும் விழா குருங்காடு அருகே நேற்று நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார். துணை தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.
வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், துணை தலைவர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துசுந்தரம், காஞ்சனா, ஒன்றிய கவுன்சிலர் அமளிசுதா முனுசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள், பழவகை மரங்கள் மற்றும் நிழல் தரும் மரங்கள் என 400க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை கிராம மக்களுடன் இணைந்து நட்டனர். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.