Monday, May 20, 2024
Home » தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு கவசங்களை முறையாக பயன்படுத்துவது தொடர்பாக பயிற்சி: தமிழ்நாடு அரசு

தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு கவசங்களை முறையாக பயன்படுத்துவது தொடர்பாக பயிற்சி: தமிழ்நாடு அரசு

by MuthuKumar

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரால் 09.12.2022 அன்று தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பல்வேறு நலத் திட்டங்கள் வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், கீழ்க்காணும் பணிகளில் ஈடுபடும் நபர்கள் முக்கிய தூய்மைப் பணியாளர்களாக (Core Sanitation Workers) கருதப்படுவார்கள்:-
* கழிவுநீர் கட்டமைப்புகளை தூர்வாருபவர்கள்
* கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்பவர்கள்,
* வணிக நிறுவனங்கள், பொது மற்றும் சமூக கழிப்பறைகளை சுத்தம் செய்து பராமரிப்பவர்கள்
* கழிவுநீர் கட்டமைப்பு மற்றும் உந்து நிலையங்களை இயக்கி பராமரிப்பு பணிகளை மேற்கொள்பவர்கள்
* கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்பவர்கள்

முதற்கட்டமாக, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-6, மதுரை மாநகராட்சி மண்டலம்-3, புதுக்கோட்டை மற்றும் பொள்ளாச்சி நகராட்சிகள், சேரன்மாதேவி பேரூராட்சி என ஐந்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றக்கூடிய முக்கிய தூய்மை பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் பயிற்சி பெற்ற பணியாளர்களால் முக்கிய தூய்மைப் பணியாளர்களின் இறுதிப் பட்டியல் சரிபார்க்கப்பட்டு 2,198 முக்கிய தூய்மைப் பணியாளர்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டாம் கட்டமாக, முக்கிய தூய்மைப் பணியாளர்களை கணக்கெடுக்கும் பணிகள் 646 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான கணக்கெடுக்கும் பணிகள் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்ககம் (NULM) மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மகளிர் சுய உதவிக் குழுவின் உறுப்பினர்களை கணக்கெடுப்பாளர்களாக தேர்வு செய்து அவர்களுக்கான சிறப்பு பயிற்சிகள், சிறந்த பயிற்சியாளர்களை (Master Trainers) கொண்டு வழங்கப்படும்.

இப்பயிற்சிகளை வழங்குவதற்காக 148 சிறந்த பயிற்சியாளர்கள் (Master Trainers) அனைத்து நகர்புர உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து தேர்வு செய்து அவர்களுக்கான பயிற்சிகள், 07.09.2023 முதல் சென்னை குடிநீர் வாரிய பயிற்சி மையத்தில் நகர்ப்புர மேலாண்மை மையத்தின் (Urban Management Centre) மூலமாக பயிற்சி வழங்கப்படுகிறது.

கணக்கெடுப்பாளர்களாக பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுவினர்களைக் கொண்டு முக்கிய தூய்மை பணியாளர்கள் கணக்கெடுக்கப்படுவார்கள். அவர்களது விவரங்களை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பி வைத்து சரிபார்க்கப்பட்ட பின்னர் முக்கிய தூய்மைப் பணியாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

முக்கியத் தூய்மைப் பணியாளர்களாக தேர்வு செய்யப்படுபவர்களின் பணித்தன்மைக்கேற்ப பாதுகாப்பான முறையில் பணி செய்வது குறித்த பயிற்சிகள், அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்படும்.

இப்பயிற்சியில், வெளியூர்களிலிருந்து கலந்துகொள்ளும் முக்கிய தூய்மைப் பணியாளர்களுக்கு தங்கும் வசதி மற்றும் பயிற்சி பெறும் அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். பயிற்சி குறித்த கையேடுகள் மற்றும் அடையாள அட்டைகளும் வழங்கப்படும்.

இப்பயிற்சியின் போது, 2022-ம் ஆண்டு தமிழ்நாடு மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு விதிகளின்படி, பாதுகாப்பு கவசங்களை முறையாக பயன்படுத்துவது, அந்தந்தப் பணிக்கு ஏற்றவாறு எவ்வாறு பாதுகாப்பு கவசங்களை அணிந்து பயன்படுத்துவது போன்றவை தொடர்பான உரிய நடைமுறைகள் விளக்கங்கள் அளிக்கப்பட்டு, பயிற்சிகள் வழங்கப்படும்.

பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்தவுடன் சான்றிதழ்கள் மற்றும் பணிபுரியும் பணிக்கு ஏற்றார்போல் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும்.

முக்கிய தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம், திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கடன் திட்டம் போன்றவை, முக்கிய தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் பயன் பெறும் வகையில் தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், முக்கிய தூய்மைப் பணியாளர்கள் பயன்பெறும் வகையில், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் மூலம் அவ்வப்போது சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் விபத்து காப்பீட்டுத் திட்டங்களில் சேர்ந்து பயனடைவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும்.

இது மட்டுமின்றி, ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து நலத்திட்டங்களையும் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நகர்புரங்கள் மற்றும் மாநகரங்களை சுத்தமாக பேணி பாதுகாக்கும் தூய்மை பணியாளர்களின் நலனில் கவனம் செலுத்தும் வகையில் அவர்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டை உறுதி செய்வதற்காக, முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டில் “தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம்“ கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் முக்கிய தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளர்களின் பாதுகாப்பு உபகரணங்கள், வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாடு உறுதி செய்யப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர், “தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம்” தொடர்பாக பின்வருமாறு உத்தரவிட்டுள்ளார்:
* தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி அளவில் வைப்பு நிதி (Corpus Fund) உருவாக்கப்படும்.
* இத்திட்ட நிதியின் முன்னோடி முகமையாக (Nodal Agency) நகராட்சி நிருவாக இயக்குநரகம் செயல்படும்.
* தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் ரூ.50 கோடி வைப்பு நிதியில் மாநில அரசின் பங்காக ரூ.10 கோடி அனுமதிக்கப்படுகிறது.
* எஞ்சிய ரூ.40 கோடி வைப்பு நிதியானது நகர்ப்புர உள்ளாட்சிகளின் நிலைக்கேற்ற நிதிப்பங்களிப்பு மற்றும் அரசு சார் பொது நிறுவனங்களின் நிதிப்பங்களிப்புடன் நகராட்சி நிருவாக இயக்குநரால் ஏற்படுத்தப்படும்.

“தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம்” தொடர்பான முதலமைச்சரின் மேற்குறிப்பிட்டுள்ள ஆணைகள், அரசு, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலன்களை பேணி காக்கும் வகையில் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைகின்றன.

You may also like

Leave a Comment

fifteen + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi