நெய்வேலி: இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் சனாதனத்தை பற்றி தொடர்ந்து பேசுவோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதி திமுக எம்எல்ஏ சபா. ராஜேந்திரன் இல்ல திருமண விழா நெய்வேயிலில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: சனாதன ஒழிப்பு மாநாட்டில் நான் கலந்து கொண்டு பேசியது ஒருநாள் செய்திதான், அதை பொய்யாக திரித்து பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இந்திய அளவில் பேச வைத்துவிட்டார்கள். ஒன்பது ஆண்டுகாலம் ஆட்சி செய்த பாஜக இதுவரை என்ன சாதித்தது என்று கேட்டதற்கு பிரதமர் மோடி இந்தியாவை மாற்றி காட்டுகிறேன் எனக்கூறினார்.
தற்போது இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றியுள்ளார். இதை தவிர வேறு எந்த திட்டங்களையும் செய்யவில்லை. சனாதனத்தை பற்றி இப்போது பேச வில்லை. 200 ஆண்டுகளாக பேசி வருகிறோம், இனியும் தொடர்ந்து பேசுவோம். இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து சனாதனத்தை ஒழிப்பதற்காக குரல் கொடுப்போம். ஜி 20 மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்த குடிசைகளை திரை போட்டு மூடியதுதான் ஒன்றிய அரசின் சாதனை.பாஜகவின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டு வருகிறது. அதை மறைக்கவே என்மீது சனாதனம் குறித்து தவறாக பேசி வருவதாக அவதூறு பரப்புகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.