‘‘கூட்டணிக்கட்சி எம்எல்ஏக்கள் அதிருப்தியால ரிசல்ட் எப்படி இருக்குமோ என்ற கவலையில இருக்கிறாங்களாமே தாமரை கட்சிக்காரங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுவையில் மும்முனை போட்டியாக இருந்தாலும் காங்கிரஸ், பாஜ வேட்பாளர்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவியது. தேர்தல் பிரசாரத்தில் புல்லட்சாமி துணையுடன் தான் பாஜ வேட்பாளர் பிரசாரம் செய்தார். இறுதிகட்டமா ஒவ்வொரு தொகுதியிலும் பூத் சிலிப் உள்ளிட்ட தேர்தல் பணிகளை பாஜ வேட்பாளர் சிவாயமானவர், தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியான பாமகவை வைத்து செய்தாராம்..
கூட்டணி கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்களை அவர் நம்பவில்லையாம்.. காரணம், கடந்த மூன்று ஆண்டுகளாக என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களான ஆசிரியர், போலீசாருக்கு இடமாறுதல் போன்றவற்றை உள்துறை, கல்வித்துறை வைத்திருந்த சிவாயமானவரிடம் சிபாரிசுகளை செய்து கொடுக்கவில்லையாம்.. இதனால் அவர் மீது கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் கடும் அதிருப்தியில் இருந்தாங்களாம்.. மேலும் புதுவையில் பாஜவை வளர்த்து விடக்கூடாதுன்னும் என்.ஆர்.காங்கிரஸ் மத்தியில் பரவலான கருத்து நிலவி வருகிறதாம்.
இது தொடர்பான பிரச்னைகளை கட்சி தலைவரான புல்லட்சாமியிடம் நிர்வாகிகள் தெரிவிச்சிருக்காங்க.. ஆனால் அவர் தேர்தல் பணியில் சுணக்கம் காட்டக்கூடாது. தேர்தலுக்கு பிறகு நாம் பார்த்துக்கொள்ளலாம்னு சமாதானம் கூறி அனுப்பி வைத்தாராம்.. இதனால் இந்த தேர்தல் ரிசல்ட் எப்படி இருக்குமோ என்ற கவலை பாஜவினர் மத்தியில் இருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஒரு சில பத்திரப்பதிவு ஆபிஸ்ல வசூல் அதிகமா நடப்பதா புகார் குரல் ஒலிக்க தொடங்கியிருக்காமே..’’ என அடுத்தக்கேள்விக்கு தாவினார் பீட்டர் மாமா.
‘‘மிஸ்டர்பத்தூர் மாவட்டத்துல சோலையில தொடங்கி பேட்டையில முடியுற ஏரியாவுல, பத்திரத்தை பதிவு செய்ற ஆபிஸ் இருக்குது. இந்த ஆபிஸ்ல பதிவு செய்ற அதிகாரி ஒருத்தரு பணிபுரிஞ்சு வர்றாராம்.. இவரு, ஒரு பத்திரத்தை பதிவு ெசய்றதுக்கு, இடத்துக்கு ஏற்றபடி 5 கே டூ 25 கே வரைக்கு வசூல் செய்றாராம்.. இந்த வசூல் மேட்டரை இவரு நேரடியாக களத்துல இறங்கி செய்றதில்லையாம்.. ஒரு பத்திரத்திற்கு எவ்வளவு கொடுக்கணுமோ அதை, டாகுமென்ட் ரைட்டர் மூலமாக வாங்கிக்குறாராம்..
ஏரியாவுக்கு ஏற்றபடி இந்த வசூல் ரேட் முடிவு செய்றாராம்.. இதுல ஸ்பெஷல் என்னன்னா? முகூர்த்த நாட்கள்ல பதிவு செய்யறதுக்கு, யார் சம்திங் அதிகமாக கொடுக்குறாங்களோ, அவங்களுக்குத்தான் பதிவு செய்றதுக்கு ேடாக்கன் கிடைக்குமாம்.. இப்படி சோலையில தொடங்கி பேட்டையில முடியுற பதிவு ஆபிஸ்ல ஏகப்பட்ட புகார் குரல் ஒலிக்கத்தொடங்கியிருக்குதாம்.. இதனால, சம்பந்தப்பட்ட அதிகாரிங்க, அதிரடி ஆய்வு செஞ்சி, தப்பு செய்ற அதிகாரிங்க மேல நடவடிக்கை எடுக்க வேண்டும்னு பாதிக்கப்பட்ட ஜனங்களும், பதிவு ஆபிஸ்ல இருந்தும் புகார்கள் வெளியவரத் தொடங்கியிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சேலத்துக்காரர் தனது பூத்துல ஓட்டு குறையாம இருக்க 2, 3 பெரிய நோட்டுகளை திணிச்ச கதை தெரியுமா?’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழகமே உற்றுநோக்கும் ஒரு தொகுதியா, சேலத்துக்காரரின் சொந்த ஊரான மாங்கனி தொகுதி இருக்கு. இந்த தொகுதியில் வெற்றி என்பது வசமாகாவிட்டாலும், வாக்கு சதவீதம் குறைஞ்சிட கூடாது என்பதில் உறுதியாக இருந்தாராம் சேலத்துக்காரரு. கட்சி நிர்வாகிகளுக்கும் இதை ஒரு கடும் உத்தரவாகவே போட்டிருந்தாராம்..
குறிப்பா, தனது சொந்த தொகுதியில், இதர கட்சிகள் அனைத்தையும் விட அதிக வாக்குகள் வாங்க வேண்டும் என்பதே அவரது முக்கிய எய்மாம். இதற்கொரு வலுவான காரணமும் இருக்காம்.. கடந்த முறை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், சொந்த ஊரு தொகுதி கைவிட்டுப்போனது. அதில் தனது சொந்த தொகுதியில் மட்டுமல்ல, அவர் வாக்களித்த பூத்திலேயே, இலைக்கு குறைவான ஓட்டு தான் கிடைச்சதாம்..
இந்த முறை அப்படி நடந்து விடக்கூடாது என்பதற்காக, சொந்த தொகுதி வாக்காளர்களுக்கு 2 பெரிய நோட்டுகள் திணிக்கப்பட்டதாம்.. அதிலும் தனது பூத் அமைந்திருக்கும் பகுதி வாக்காளர்களுக்கு 3 நோட்டுகளாம்.. எத்தனை திணிப்புகள் நடந்தாலும், வாக்காள எஜமானர்கள் என்ன முடிவை கொடுப்பாங்க என்பது அவங்க கையிலதான் இருக்கு என்று புலம்புறாங்களாம் இலை கட்சியின் மூத்த நிர்வாகிகள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் ரெண்டு விதமா இருந்ததால மாவட்ட அதிகாரிங்க குழப்பம் அடைஞ்சிட்டாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் தொடர்பான விவரங்களை மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் அதிகாரிகள் வெளியிட்டுக்கிட்டு இருந்தாங்க..
ஆனா, இந்த இரண்டு விவரமுமே ரெண்டு விதமாக இருந்ததால மாவட்ட அளவில் விவரங்களை வெளியிட்ட அதிகாரிங்க ரொம்பவே குழப்பம் அடைஞ்சிட்டாங்க.. மாநில அளவில் வெளியிட்ட வாக்குப்பதிவு சதவீத விவரம் அதிகாரிகளால் எப்படி வெளியிடப்படுகிறதுனு தெரியாதது அவர்களின் குழப்பத்திற்கு காரணமாயிட்டு.. இது மாலை 5 மணி வரை நீடித்தது. எனவே, இறுதி வாக்குப்பதிவு சதவீதம் எப்படி வரும் என்கிற எதிர்பார்ப்புதான் வாக்காளர்களுக்கும், குழப்பம் அடைஞ்ச அதிகாரிகளுக்கும் ஏற்பட்டதாம்..’’ என்றார் விக்கியானந்தா.