சேலம்: சேலம் டவுன் ரயில்வே ஸ்டேஷன் அடுத்துள்ள அணைமேடு பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த வழியே இன்று காலை சேலம்-விருத்தாசலம் ரயில் செல்வதற்காக கேட்டை பூட்டும் பணியில் கேட்கீப்பர் ஈடுபட்டுக் கொண் டிருந்தார். அப்போது வேகமாக சில வாகனங்கள் ரயில்வே கேட்டை கடந்து சென்றது. அதில், சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சென்ற மினிலாரி ஒன்று கேட் பூட்டப்படுவதற்குள் கடந்து விடலாம் என வேகமாக சென்றதில் அந்த கேட் மீது மோதியது. இதில் கம்பம் உடைந்து கேட் விழுந்தது. இதனால் கேட் கீப்பர் உடனடியாக அந்த மினிலாரியை பின்னோக்கி இயக்கும்படி தெரிவித்து அதனை ஓரம் கட்டினார். தொடர்ந்து இருபுறமும் இரும்பு சங்கிலியை கட்டி தடுப்பு ஏற்படுத்தினார்.
பின்னர் விருத்தாசலம் ரயில் கடந்து சென்றது. ரயில்வே கேட் உடைந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலத்தில் இருந்து சென்னை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டத்திற்கு செல்லும் பேருந்துகள் நீண்டவரிசையில் நின்றன. இதுபற்றி தகவல் அறிந்து வந்த மாநகர போக்குவரத்து போலீசார் வாகனங்களை டவுன் வழியாக திருப்பிவிட்டு போக்குவரத்தை சீர் செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள், ஆர்பிஎப் உதவி எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள், ரயில்வே கேட் மீது மோதிய மினி லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடைந்த ரயில்வே கேட்டை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.