ஓமலூர்: சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக, பேராசிரியர்கள் உட்பட 5 பேர் கருப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகினர். அவர்களிடம் உதவி ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசிடம் உரிய அனுமதி பெறாமல், பூட்டர் கல்வி நிறுவனம் துவங்கிய வழக் கில் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். பதிவாளர் தங்கவேல் உள்ளிட்ட 3 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், பொறுப்பு பதிவாளராக வேதியியல் துறை பேராசிரியர் விஷ்வநாதமூர்த்தியை துணைவேந்தர் ஜெகநாதன் நியமித்து உத்தரவிட்டார். பொறுப்பு பதிவாளர் விஸ்வநாதமூர்த்தி பூட்டர் நிறுவனத்திற்காக பல ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளதாகவும், அதற்கு துணையாக பேராசிரியர்கள் ஜெயராமன், சுப்பிரமணிய பாரதி, உதவியாளர் விஷ்ணுமூர்த்தி, பூட்டர் நிறுவன ஊழியர் வனிதா ஆகியோர் இருந்ததாகவும் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன், மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து பூட்டர் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் பெற உதவியாக இருந்த பொருளாதார துறை பேராசிரியர் ஜெயராமன், மேலாண்மை கல்வி நிறுவன பேராசிரியர் சுப்பிரமணிய பாரதி, விலங்கியல் துறை உதவி பேராசிரியர் நரேஷ்குமார், உளவியல் துறை உதவி பேராசிரியர் ஜெயகுமார், விருந்தினர் மாளிகை தினக்கூலி பணியாளர் நந்தீஸ்வரன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு கருப்பூர் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி இன்று கருப்பூர் காவல் நிலையத் தில் 5 பேரும் ஆஜராகினர். அவர்களிடம் சூரமங்கலம் உதவி ஆணையர் நிலவழகன், காவல் ஆய்வாளர் மனோன்மணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரிடமும் விசாரணை நடத்த சம்மன் அனுப்ப இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.