சேலம்: சேலம் நெடுஞ்சாலை நகரில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிமுன் அன்சாரி சந்தித்து ஒரு மணி நேரம் பேசினார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். இவர் நேற்று, அதிமுகவின் ஒட்டுமொத்த தொண்டர்கள் எடுத்த முடிவின்படி தான் பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது என்று கூறினார். இந்நிலையில் இன்று காலை நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் உதயகுமார் சந்தித்து பேசினார்.
அதேபோல் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியும் அவரை சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி சந்தித்து பேசினார். தமிமுன் அன்சாரி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது, அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், தற்போது அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.