கூடலூர்: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சபரிமலை புனிதயாத்திரையையொட்டி, சன்னிதானம், பம்பை, நிலக்கல், அப்பாச்சிமேடு, நீலிமலை, சாரல்மேடு, எருமேலி ஆகிய இடங்களில் மருத்துவமனைகள் மூலமாகவும், இடையில் உள்ள 19 அவசர மருத்துவ மையங்கள் மூலமாகவும் சிறப்பு சேவைகளை சுகாதாரத்துறை அமைத்து வருகிறது. இதுதவிர, பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்களுக்காக மலையாளம், தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய 6 மொழிகளில் விழிப்புணர்வு சுவரொட்டிகளும், ஒலிபெருக்கி செய்திகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரப் பணியாளர்களிடம் சுகாதாரம் தொடர்பான விஷயங்களைக் கேட்பதற்காக பல மொழிகள் தெரிந்தவர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.
பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் தரிசனத்திற்கு வரும்போது தாங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளையும், மருத்துவ பதிவுகளையும் எடுத்து வரவேண்டும். விரதத்தின் போது வழக்கமான மருந்துகளை உட்கொள்வதை நிறுத்த வேண்டாம். மலை ஏறும்போது ஏற்படும் உடல்நலக் கோளாறுகளைத் தவிர்க்க, தரிசனத்திற்குச் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பு நடைபயிற்சி உள்ளிட்ட லேசான உடற்பயிற்சிகளைத் தொடங்க வேண்டும். மலை ஏறும் போது சோர்வு, பலவீனம், மார்பு வலி அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டால், மலை ஏறுவதை நிறுத்திவிட்டு அருகில் உள்ள மருத்துவ உதவியை நாடுங்கள். அவசர உதவிக்கு 04735 203232ஐ அழைக்கவும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.