கள்ளக்குறிச்சி: கொரோனா காலத்தில் மாயமான டிக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்கியதாக அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கடந்த மாதம் 7ம் தேதி காலை கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து சென்றது. கண்டக்டர் இல்லாத இந்த பேருந்தில், கண்டாச்சிமங்கலம் கிராமத்தை சேர்ந்த தமிழரசு என்ற கண்டக்டர், பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துவிட்டு இறங்கிவிட்டார். காலை 6.45 மணியளவில் விழுப்புரம் பேருந்து நிலையம் வந்த பேருந்தை வேலூர் மண்டல டிக்கட் பரிசோதகர் ஜெயவேல் தலைமையிலான குழுவினர் நிறுத்தி பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டனர்.அப்போது அந்த டிக்கெட்கள் 2021-2022ல் கொரோனா காலத்தில் காணாமல் போன டிக்கெட்கள் என தெரியவந்தது.இந்நிலையில், கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர் முருகன், கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் கடந்த மாதம் 14ம் தேதி புகார் ஒன்றை கொடுத்தார்.
அதில் காணாமல் போன, ரூ.9 லட்சத்து 2 ஆயிரத்து 520 மதிப்பிலான டிக்கெட்களை பயணிகளிடம் தமிழரசு வழங்கியதால் அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.இந்த நிலையில், கண்டக்டர் தமிழரசு, கள்ளக்குறிச்சி காவல் நிலையத்துக்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், ஏற்கனவே காணாமல் போன டிக்கெட்டை கிளை மேலாளர் முருகன், அலுவலக பணியாளர்கள் 4 பேர் மூலமாக கண்டக்டர்களுக்கு தெரியாமல் நிர்வாகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி தவறான முறையில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் செயல்பட்டுள்ளார், என தெரிவித்துள்ளார். இந்நிலையில் காணாமல் போன டிக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்கியதாக கண்டக்டர் தமிழரசுவை சஸ்பெண்ட் செய்து விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கிளை மேலாளர் உள்பட 14 ேபரிடம் விசாரணை நடக்கிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.