திருவனந்தபுரம்: சபரிமலையில் இந்த மண்டல காலத்தில் நேற்று வரை 26.60 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறினார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 27ம் தேதி மண்டல பூஜை நடக்கிறது. இதையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி டிச. 23ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டது. நாளை 26ம் தேதி மாலை சன்னிதானத்தை அடையும். அதன்பின் தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும். மண்டல பூஜைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் சபரிமலையில் பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் சபரிமலையில் நேற்று நிருபர்களிடம் கூறியது: இந்த மண்டலகாலத்தில் சபரிமலைக்கு நவ.16 முதல் டிச. 24ம் தேதி (நேற்று) வரை 26.60 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்துள்ளனர். 23ம் தேதி 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். ற்போது தினசரி முன்பதிவு 80 ஆயிரமாகவும் உடனடி முன்பதிவு 10 ஆயிரமாகவும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. 26ம் தேதி தினசரி முன்பதிவு 64 ஆயிரமாகவும் மண்டல பூஜை நாளான 27ம் தேதி 70 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டு உள்ளது. ஜனவரி முதல் மீண்டும் 80 ஆயிரமாக உயர்த்தப்படும்.