திருவள்ளூர்: அகில இந்திய வானொலி மற்றும் சென்னை, எத்திராஜ் கல்லூரி இணைந்து கல்லூரிகளுக்கு இடையேயான ஜி20 போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தன. தென்னிந்தியா முழுவதும் உள்ள 30க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். குறும்படப் போட்டியில் பூந்தமல்லி – ஆவடி நெடுஞ்சாலை திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி காட்சித் தொடர்பியல் துறை 2ம் ஆண்டு மாணவர் சூர்யபிரகாஷ் இயக்கிய ‘அவள்’ குறும்படம் 2ம் பரிசைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவள் குறும்படக் குழுவிற்கு விருதினை வழங்கி பாராட்டினார். ‘‘இது எங்களுக்கு ஒரு வரலாற்றுத் தருணம். ஒரு குறும்படத்துக்காக அரசு விருதை வென்றுள்ளோம். நான் பெருமைப்படுகிறேன். இந்த அசாத்தியமான சாதனைக்கு எனது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உதவினார்கள்’’ என்று காட்சித் தொடர்பியல் துறைத்தலைவர் ஆர்.ஸ்ரீனிவாசன் கூறினார். இந்நிலையில் கல்லூரிகளுக்கு இடையேயான ஜி 20 குறும்படப் போட்டியில் 2ம் பரிசு வென்ற எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ‘அவள்’ குறும்பட குழுவினரை கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.