திருவனந்தபுரம்: நம் நாட்டின் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒடுக்க பாஜ அரசு முயற்சிக்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
கேரள மாநிலம் கொல்லத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் பேசியது: பாஜ அரசு மத ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிரான போராட்டம் நம் நாட்டுக்கு மிகவும் அவசியமாகும். நம்முடைய நாட்டில் தற்போதைய மோசமான நிலை குறித்து கவலைப்படும் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர்.
சமநீதியும், எந்த மதத்தையும் பின்பற்றும் உரிமையையும் வழங்குவது தான் மதசார்பின்மையின் சிறப்பம்சமாகும். ஆனால் ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்பினர் மதசார்பின்மைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். நம் நாட்டின் ஜனநாயகத்திற்கு தற்போது பெரும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒடுக்க பாஜ அரசு முயற்சிக்கின்றது.
தேர்தல் பத்திர விவகாரம் நம் நாடு கண்ட பெரும் ஊழலாகும். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுக கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவெடுத்தன. ஹிட்லரின் பாதையைத் தான் ஆர்எஸ்எஸ் பின் தொடர்கிறது. உள்நாட்டு எதிரிகளை அழிப்பதற்கு ஜெர்மனி மேற்கொண்ட நடவடிக்கைகளை உலகமே கண்டித்தபோது ஆர்எஸ்எஸ் மட்டும் தான் அந்த நடவடிக்கைக்கு ஆதரவளித்தது. இவ்வாறு அவர் பேசினார்.