புதுடெல்லி: கடந்த 2016ம் ஆண்டு பெங்களூரில் ஆர்எஸ்எஸ் தலைவர் ருத்ரேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பிஎப்ஐ அமைப்பை சேர்ந்த தலைவரான முகமத் கவுஸ் நியாசி குற்றம்சாட்டப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் பல்வேறு நாடுகளுக்கு சென்று தலைமறைவாக இருந்து வந்தார்.
இவரது தலைக்கு தேசிய புலனாய்வு முகமையானது ₹5லட்சம் சன்மானம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் குஜராத்தை சேர்ந்த தீவிரவாத தடுப்பு படையினர் நியாசி நடமாட்டம் குறித்து கண்காணித்து வந்ததோடு அது குறித்த தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர். தென்கொரியாவில் முகமத் கவுஸ் நியாசி பதுங்கி இருப்பது தெரியவந்த நிலையில் அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து நியாசியை தென்கொரிய போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து உடனடியாக அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது. தற்போது அவர் நாடு கடத்தப்பட்டு இந்தியா அழைத்துவரப்படுகிறார். மும்பை கொண்டுவரப்பட்டும் நியாசி ஆர்எஸ்எஸ் தலைவர் கொலை வழக்கு விசாரணையை எதிர்கொள்வார்.