பீஜிங்: ரூ.14,941 கோடி சட்ட விரோத பண மோசடி வழக்கில் 7 பேரை ஹாங்காங் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவில் நடந்த மொபைல் ஆப் கடன் மோசடியிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து ஹாங்காங் சுங்கத்துறை தலைவர் சுஸேட் எல்பி துங்க் சிங் கூறுகையில்,‘‘போலியான வங்கி கணக்குகள்,செயல்படாத நிறுவனங்களின் மூலம் மொத்தம் ரூ.14,941 கோடி அளவுக்கு சட்ட விரோத பண மோசடிகளில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடந்த மொபைல் ஆப் கடன் மோசடிக்கும் இந்த கும்பலுக்கும் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் ஒரு நாளைக்கு 50க்கும் அதிகமான பரிவர்த்தனைகள் மேற்கொண்டுள்ளனர். இந்தியா மற்றும் சில நாடுகளின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், முக்கிய மூளையாக செயல்பட்ட ஒரு வாலிபர், அவரது மனைவி, சகோதரர், தந்தை உட்பட 7 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹாங்காங்கில் வசிக்கும் சீனர் அல்லாத சில நபர்களும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். இந்த நடவடிக்கையில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த மின்னணு சாதனங்கள், 8,000 காரட்டுகளுக்கும் அதிகமான செயற்கை ரத்தினக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.