ரோம்: இத்தாலியில் நடந்த ரோம் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் சிலி வீரர் நிகோலஸ் ஜாரியுடன் (28 வயது, 24வது ரேங்க்) மோதிய அலெக்சாண்டர் ஸ்வெரவ் (27 வயது, 5வது ரேங்க்) 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 41 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. ‘மாஸ்டர்ஸ் 1000’ டென்னிஸ் தொடர்களில் ஸ்வெரவ் வென்ற 6வது பட்டம் இது. ரோம் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதை அடுத்து, ஒற்றையர் தரவரிசையில் அலெக்சாண்டர் 1 இடம் முன்னேறி 4வது இடத்தை பிடித்துள்ளார். பைனலில் தோற்று 2வது இடம் பிடித்த நிகோலஸ் ஜாரி 8 இடங்கள் முன்னேறி 16வது இடத்தில் உள்ளார். நோவாக் ஜோகோவிச் (செர்பியா), யானிக் சின்னர் (இத்தாலி), கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்) முதல் 3 இடங்களில் நீடிக்கின்றனர்.