நாசிக்: காவல் நிலையத்தில் ‘ரோல் கால்’ நடந்து கொண்டிருந்த போது பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்தது.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் அம்பாட் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக அசோக் நிவ்ருத்தி நஜன் (47) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் வழக்கம் போல் நேற்று காவல் நிலையத்திற்கு வந்தார். தனது அறைக்கு சென்றார். அடுத்த சில நிமிடங்களில் தனது சர்வீஸ் துப்பாக்கியால், தன்னைத் தானே தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது காவல் நிலையத்தின் வெளியே ‘ரோல் கால்’ நடந்து கொண்டிருந்தது. வெளியே இருந்த போலீஸ்காரர்கள் உள்ளே சென்று பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் இன்ஸ்பெக்டர் அசோக் நிவ்ருத்தி நஜன் கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த போலீஸ் உயரதிகாரிகள், அசோக் நிவ்ருத்தி நஜனின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏசிபி சேகர் தேஷ்முக் கூறுகையில், ‘வருகைப்பதிவு அறிக்கையை காண்பிப்பதற்காக கான்ஸ்டபிள் ஒருவர் இன்ஸ்பெக்டரின் அறைக்குள் செல்ல முயன்றார். அப்போது தனிமையில் நாற்காலியில் அமர்ந்திருந்த அசோக் நிவ்ருத்தி நஜன், தனது பாதுகாப்பு துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறையில் தற்கொலை குறிப்பு கடிதம் ஏதும் கிடைக்கவில்லை. குடும்ப பிரச்னையா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களா? என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.