தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் இஸ்ரோ ஏவுதள வளாகத்தில் இருந்து ரோகிணி ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்பட உள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு இன்று காலை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். முதல் நாளில் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் தயாரிக்கப்பட்ட RH 200 என்ற சவுண்டிங் ராக்கெட்டை குலசேகரன்பட்டினத்தில் இருந்து விண்ணுக்கு செலுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக குலசேகரன்பட்டினத்தில் தற்காலிக கான்க்ரீட் ஏவுதளம் ஒன்றும் அமைக்கப்பட்டது. குலசேகரன்பட்டினத்தில் அமைந்துள்ள இந்திய பெருங்கடல் பகுதியில், காற்றின் திசை வேகம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள RH 200 ராக்கெட் உதவும்
எதிர்காலத்தில் குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்படும்போது, இந்த ராக்கெட்டின் தரவுகள் விஞ்ஞானிகளுக்கு பயன்படும். 200 மில்லி மீட்டர் விட்டமும் 3,590 மில்லி மீட்டர் நீளமும் கொண்ட RH 200 என்ற சவுண்டிங் ராக்கெட்டின் எடை 108 கிலோ ஆகும். விண்ணில் சுமார் 100 கிலோ மீட்டர் உயரம் வரை பயணித்த பின், இந்திய பெருங்கடலில் விழும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தயாரிக்கும் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்வி. மார்க்-3 ஆகிய முக்கியமான ராக்கெட்டுகளுக்கு முன்னோடியாக இருந்தது ‘ஆர்.எச்.200’ என்று அழைக்கப்படும் ‘சவுண்டிங்’ ராக்கெட்டாகும். ரோகிணி என பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட் இன்று பிற்பகல் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.