சென்னை: குடிநீர் வாரிய பணிகள் முடிந்ததை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு பிறகு கே.கே.நகர் அண்ணா மெயின் ரோடு இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.சென்னை கே.கே.நகரில் இருந்து நெசப்பாக்கம், ராமாபுரம் செல்லும் 80 அடி அண்ணா மெயின் ரோட்டில், குடிநீர் வாரிய பணிக்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிநீர் வாரியம் மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் ஒருவழிப்பாதை முழுமையாக போக்குவரத்துக்கு தடை செய்து மூடப்பட்டது.
இதற்கான பணிகள் மற்றும் கழிவு நீர் குழாய்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டு மீண்டும் அண்ணா மெயின் ரோடு இரு வழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது. குடிநீர் வாரிய பணிகள் முடிந்ததையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் சேதமடைந்த சாலை இரவோடு இரவாக சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயண்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதைதொடர்ந்து சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் மீண்டும் கே.கே.நகரில் இருந்து ராமாபுரம் செல்லும் அண்ணா மெயின் ரோட்டை இருவழி சாலையாக மாற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர். 5 ஆண்டுகளாக கடுமையாக அவதிப்பட்டு வந்த அப்பகுதி மக்கள் அண்ணா மெயின் ரோடு மீண்டும் இருவழிப்பாதையாக மாற்றப்பட்டதால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.