பள்ளிப்பட்டு: ஜே.சி.பி இயந்திரம் மூலம் கிராமசாலை துண்டிப்பு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை அருகே கதனநகரம் ஊராட்சிக்குட்பட்ட கிருஷ்ணமராஜ் நகர் கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள எஸ்.கே.வி. கண்டிகை முதல் கிருஷ்ணமராஜ் நகர் வரை செல்லும் ஊராட்சி சாலையை நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த காந்தி என்பவர் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சாலைக்கு நடுவில் குழி வெட்டினார். இதனால் சாலை துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் தகவலின் பேரில் ஊராட்சி மன்றத் தலைவர் விஜயன் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சாலை துண்டிப்பு தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் துரைக்கண்ணு ஆர்.கே. பேட்டை காவல் நிலையத்தில் காந்தி மீது புகார் செய்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், மாணிக்கம் ஆகியோர் கிராம சாலையை துண்டித்து குழி தோண்டப்பட்டுள்ள பகுதியில் பார்வையிட்டு உடனடியாக சாலை சீரமைக்க ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். பொது சாலையை சேதப்படுத்திய நபர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கேட்டுக்கொண்டனர்.