சுசீந்திரம்: சுசீந்திரம் அருகே தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சாலையோரங்களில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இவை அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை உருவாக்குவதுடன், பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்நிலையில் குப்பை குவியல்கள் மீது அவ்வப்போது மர்ம நபர்கள் தீ வைத்து செல்கின்றனர். அதுபோல புகை பிடிப்பவர்கள் எஞ்சிய துண்டை அணைக்காமல் வீசி விடுவதாலும் இந்த குப்பையில் தீ பிடிக்கிறது. இந்த தீ மளமளவென பரவி சாலையோரங்களில் உள்ள மரங்களிலும் பிடித்து அவை கருகி பட்டுவிடும் நிலை உள்ளது.
புதிதாக மரங்களை நட்டு இயற்கை சூழலை மேம்படுத்த குரல்கள் எழுந்து வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்களால் இருக்கும் மரங்களும் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே நடவடிக்கை எடுத்து சாலையோர மரங்களை காப்பாற்ற ேவண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் வாய்ப்பு உள்ள பகுதிகளில் புதிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.