சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பாஜக கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். வணக்கம் சென்னை எனக் கூறி தமது உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. அவர் உரையாற்றுகையில்; வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டிற்கான உறுதிப்பாட்டை நான் ஏற்றுள்ளேன். சென்னை நகரம் திறமை மிக்க இளைஞர்களால் நிறைந்துள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதில் சென்னை வாசிகள் மிக முக்கியமானவர்கள்.
சென்னையில் மெட்ரோ, விமான நிலையம் என பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து சென்றிருக்கிறோம். சென்னை எப்போதும் பாரம்பரியம், வணிகத்திற்கு மையப் புள்ளியாக இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியில் சென்னை மக்கள் மிக முக்கிய பங்களிப்பை வழங்குகிறார்கள். திறமை, வணிகம், பாரம்பரியம் ஆகியவற்றின் மையமாக திகழ்கிறது சென்னை. எனக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையேயான உறவு மிகவும் பழமையானது. சென்னை போன்ற நகரங்களின் வளர்ச்சிக்காக தமது அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
சூரிய மின்சக்தி திட்டத்துக்கு ரூ.75,000 கோடி செலவிடப்பட்ட உள்ளது. வீடுகளில் சூரிய மின்சக்தி தகடுகள் அமைத்து பெறப்படும் மின்சாரம் இலவசமாக தரப்படும். 2024 தொடங்கிய சில நாட்களிலேயே எரிசக்தி துறையில் பல திட்டங்களுக்கு அடிக்கல். எரிசக்தித்துறையில் தற்சார்பு நிலையை அடையும் முயற்சியை கல்பாக்கத்தில் தொடங்கி உள்ளோம். ஈனுலை தொழில்நுட்பத்தை கொண்டு வந்ததில் உலகளவில் இந்தியா 2-வது நாடாக இடம்பெறும். நாட்டின் நலனை மட்டுமே சிந்தித்துச் செயல்படுகிறேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள இந்திய மக்கள் என்னுடைய சொந்தங்கள். இந்த நாடு தான் எனது குடும்பம், நாட்டு மக்கள் தான் எனது குடும்பம். ஆதரவற்ற மக்கள் அனைவருக்கும் நானே சொந்தம் என்று கூறியுள்ளார்.