உடுமலை: உடுமலை பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நேற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்கு அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு உள்ளனர். கோவிலின் அடிவாரத்தில் இருந்து சுமார் 1000 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற கிளையாறுகள், ஓடைகள் மூலம் நீர் வந்து கொண்டிருக்கிறரத்து இருக்கும். கடந்த சில மாதங்களாக நிலவிய வெப்பத்தின் தாக்கம் காரணமாக அருவியில் நீர்வரத்து இல்லை. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அருவியில் குளிக்க முடியாமல், ஏமாற்றம் அடைந்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பாலாறு அடிவாரப் பகுதியில் உள்ள மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. நேற்று காலை அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக இருந்ததால், குளித்து மகிழ்வதற்காக வந்த சுற்றுலா பயணிகளுக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்தது. இதனால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிச் சென்றனர். அருவியில் நீர்வரத்தை கோவில் பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.