திருத்தணி: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி ஆண்டுக்கு ஒரு முறை தை மாதம் திருத்தணி அடுத்த தரணிவராகபுரம் கிராமத்தில் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டும் வள்ளி தெய்வயானை சமேதரராய் சுப்பிரமணிய சுவாமி உற்சவமூர்த்தி அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் எழுந்தருளி மலைக்கோயிலில் இருந்து படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கி மபொசி சாலை, அக்கையா சாலை, சித்தூர் சாலை, பைபாஸ், திருத்தணி – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று தரணிவராகபுறம் கிராமத்தில் எழுந்தருளினார்.
அப்போது அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பிறகு சுவாமி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது பக்தர்கள் கிராமத்தில் வீடுகள் தோறும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி தீபாரதனை செய்து சுவாமியை வழிபட்டனர். இந்த விழாவிற்கு ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் சு.ஸ்ரீதரன், இணைய ஆணையர் க.ரமணி, அறங்காவலர்கள் உஷா ரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் மற்றும் கோயில் பணியாளர்கள், தரணிவராகபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.