திருமலை: திருப்பதியில் பக்தர்களின் வசதிக்காக ரூ.418 கோடியில் 2 பிரம்மாண்ட ஓய்வறை வளாகங்கள் கட்டப்படும் என அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்தார். திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு அறங்காவலர் குழு தலைவரும் திருப்பதி எம்எல்ஏவுமான பூமன கருணாகர் நிருபர்களிடம் கூறியதாவது:
கோகர்பம் அணை அருகே பக்தர்களுக்கான நிரந்தர வரிசைகள் அமைக்க ரூ.14.47 கோடி நிதி ஒதுக்கி டெண்டர் விடப்படும். திருப்பதியில் பக்தர்களின் வசதிக்காக கோவிந்தராஜ சத்திரத்தை இடித்து புதிதாக அச்சுதம் ஓய்வறை கட்டுவதற்கும், கோதண்டராம சுவாமி சத்திரம் இடித்து அந்த இடத்தில் ஸ்ரீபதம் ஓய்வறை கட்டுவதற்காக தலா ரூ.209 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.