மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கிராமத்தில் சேதமடைந்த குடிநீர்தொட்டியை ஊராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி ஊராட்சி கிழக்கு கடற்கரை சாலையொட்டி உள்ளது. இங்கு, 700க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கடம்பாடி கிராமத்தில் இருந்து கிழக்கு கடற்கரை செல்லும் சாலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள மக்கள் பயன்பெரும் வகையில் ரூ.1 லட்சம் மதிப்பில் ஒரு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, அது 7 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் உள்ளது.
மேலும், கடந்த 6 ஆண்டுகளாக பாழடைந்தும், அதன் மீது போஸ்டர் ஒட்டப்பட்டும் கேட்பாரற்று வீணாக கிடக்கிறது. இந்த, ஒரு குடிநீர் தொட்டியை நம்பித்தான் தண்ணீர் பிடித்து குடிப்பதற்கும், சமைப்பதற்கும் அருகில் உள்ள மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த, குடிநீர் தொட்டியை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிககாததால் அதன் ஒரு பகுதி விரிசல் ஏற்பட்டும், அதில் உள்ள இரும்பு குழாய்கள் துருப்பிடித்தும், போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பாழடைந்துள்ளது.
இதனால், கடந்த 6 ஆண்டுகளாக தண்ணீர் பிடித்து பயன்படுத்த முடியாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இது, சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென பொதுமக்கள் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். எனவே, திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக தலையிட்டு குடிநீர் தொட்டியை சரி செய்தும், அதில் புதிதாக குழாய்கள் பொருத்தியும் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஊராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.