மாமல்லபுரம்: மாமல்லபுரம் – திருக்கழுக்குன்றம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள வேலிகாத்தான் மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை முக்கியமான நெடுஞ்சாலையாக உள்ளது. இச்சாலை வழியாகத்தான் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சுற்றுலாப் பயணிகள் மாமல்லபுரத்துக்கு வருவது வழக்கம். இச்சாலையில், எப்போதுமே வாகனங்கள் நிறைந்து பரபரப்பாக காணப்படும். மேலும், இரு சக்கர வாகனங்கள், கார், பஸ், டிராக்டர் மற்றும் கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. இந்த சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருபுறமும் வேலிகாத்தான் உள்ளிட்ட பல்வேறு மரங்கள், செடி கொடிகள் வளர்ந்துள்ளன.
இங்கு குழிப்பாந்தண்டலம் ஊராட்சி பகுதியில் ஆபத்தான 4 வளைவுகளில் அதிகளவு வேலிகாத்தான் மரங்கள் வளர்ந்து, சாலையில் செல்பவர்களுக்கு இடையூறாக உள்ளது. இதனால், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. வேலிகாத்தான் மரங்களின் கிளைகள் சாலையில் நீண்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, வேலிகாத்தான் உள்ளிட்ட மரங்களை அகற்ற வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் வேலிகாத்தான் மரங்களை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.