கூடுவாஞ்சேரி: மிக்ஜாம் புயலால் கடந்த 3 மற்றும் 4ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. இதனால், மக்கள் குடியிருக்கும் பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இந்நிலையில், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுத்தம் செய்வதற்காக திருச்சியில் இருந்து 30 பேர் கொண்ட குழுவினர் கடந்த 5ம் தேதி வந்தனர். அங்குள்ள மகளிர் சுய உதவி குழு கட்டிடத்தில் தங்கி தொடர்ந்து 3 நாள் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தனர். இதில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசபேட்டை கிராமத்தை சேர்ந்த முருகன் (55) என்பவர் சக பணியாளர்களுடன் தங்கி தூங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அவர் மறுநாள் 7ம் தேதி இரவு திடீரென மாயமானார். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ஊரப்பாக்கத்தில் இருந்து காரணைப்புதுச்சேரி செல்லும் கூட்ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை அருகே முருகன் இருப்பதாக கிைடத்த தகவலையடுத்து கூடுவாஞ்சேரி போலீஸ் எஸ்ஐ தனசேகரன் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று அவரை மீட்டனர். போலீசார் கூறுகையில், சம்பவத்தின்று இரவு முருகன் டீ குடிப்பதற்காக காரணைப்புதுச்சேரி டீக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது, கடையின் அருகே மழைநீர் தேங்கி இருந்த கால்வாயில் தவறி விழுந்துள்ளார். இதனால், அவர் அதிர்ச்சியில் மனநிலை பாதிக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக சாப்பிடாமல் பசியும் பட்டினியமாக இருந்து வந்துள்ளார். இதனையடுத்து, அவரை குளிக்க வைத்து உணவு, உடை வழங்கி அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தோம். பின்னர், அவரது குடும்பத்தினர் வந்தனர். அவரிகளிடம் முருகனை நேற்று மதியம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தோம்’ என்றார்.