தண்டையார்பேட்டை: என்எஸ்சி போஸ் சாலை நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்தப்படுவதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று மாநகராட்சி செயற்பொறியாளர் கார்த்திக் தலைமையில் பூக்கடை போலீசார் உதவியுடன், என்எஸ்சி போஸ் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து நடத்தப்பட்ட பழக்கடை, பூக்கடை, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை, தள்ளுவண்டி கடை என 100க்கும் மேற்பட்ட கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டது. இதனால் பூக்கடை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் எத்தனை முறை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினாலும் தொடர்ந்து நடைபாதையில் கடைகளை வைத்து மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.