ராமேஸ்வரம்: கச்சத்தீவில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகள் அகற்றப்பட்டு விட்டதாக யாழ்ப்பாணம் மறைமாவட்ட முதன்மை குரு தெரிவித்துள்ளார். கச்சத்தீவில் இலங்கை கடற்படை முகாம் வளாகத்திற்குள் 2 புத்தர் சிலைகள், கடற்படையினரால் வைக்கப்பட்டது. கடந்த மாதம் கச்சத்தீவில் நடந்த அந்தோணியார் திருவிழாவின்போது இது தெரிய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட முதன்மை குரு ஜெயரத்தினம், புத்தர் சிலைகளை அகற்ற இலங்கை அரசுக்கு வலியுறுத்தினார். கடற்படையினர் வழிபடுவதற்காக மட்டுமே ஒரு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் கச்சத்தீவில் வைக்கப்பட்ட புத்தர் சிலைகள் அகற்றப்பட்டதாக யாழ்ப்பாணம் மறைமாவட்ட முதன்மை குரு தெரிவித்துள்ளார். இது பற்றி இலங்கையிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு முதன்மை குரு ஜெயரத்தினம் அனுப்பியுள்ள கடிதத்தில், கச்சத்தீவில் கடற்படையால் வைக்கப்பட்ட புத்தர் சிலைகள் அகற்றப்பட்டு தீவுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.