திருச்சி: ‘ஒரு கட்சியின் ஏஜென்டாக செயல்படுகிற ஆளுநர் பதவியில் நீடிப்பது நல்லதல்ல’ என வைகோ தெரிவித்தார். திருச்சியில் மதிமுக பொது செயலாளர் வைகோ நேற்று அளித்த பேட்டி: மதிமுக அமைப்பு தேர்தல் 80 சதவீதம் முடிந்து விட்டது. மதிமுக வளர்ந்து வருகிறது. பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, இல்லாத அதிகாரத்தை தானே எடுத்து கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திராவிட மாடல் ஆட்சியை எதிர்த்து செயல்படுகிறார். இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. எல்லோரும் பாராட்டும் நேரத்தில் ஆளுநர் உளறிக்கொண்டு உள்ளார்.
ஆளுநரின் எந்த வார்த்தையையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்துத்துவா ஏஜென்டாக அவர் செயல்பட்டால் பதவியை ராஜினாமா செய்து விட்டு செல்லலாம். ஆளுநர் ஆளுநராக நடந்து கொள்ளவில்லை. அவர், ஒரு கட்சியின் ஏஜென்டாக செயல்பட்டு வருகிறார். இது போன்ற நிலை இதுவரை தமிழகத்தில் ஏற்பட்டதே இல்லை. இந்த தான்தோன்றி போக்கு சரியல்ல. ஆளுநர் பதவியில் ஆர்.என்.ரவி நீடிப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல. தமிழகத்தில் அமைச்சரவை மாற்றத்தில் கூட முதலமைச்சர் எல்லா விதமான யோசனையும் செய்து மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். எது நல்லதோ, அதை அவர் செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.