கொல்கத்தா: ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளன. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தங்களது மாநிலத்தை சேர்ந்தவர்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். இந்த நிலையில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது. அவை நேரடியாக ரொக்கமாக ரூ.2,000 நோட்டுகளாக வழங்கப்பட்டது.
ஏற்கனவே ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட காலத்தில் வங்கியில் செலுத்தி மாற்றிக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த நிலையில் அரசின் சார்பில் வழங்கப்பட்ட நிவாரண உதவித் தொகையானது, ரூ.2,000 நோட்டுகளாக வழங்கப்பட்டதால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. இதுகுறித்து மேற்குவங்க பாஜக மாநிலத் தலைவர் சுகந்த் மஜும்தார், தனது டுவிட்டர் பக்கத்தில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மேற்குவங்க அமைச்சர் ஒருவர் 2 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கினார். அவை 2,000 ரூபாய் நோட்டுகள். இந்தப் பணத்தின் ஆதாரம் என்ன?’ என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் இரண்டு பெண்கள் தங்களது கையில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகளை வைத்திருப்பது போன்ற வீடியோவையும் வெளியிட்டார். ஆனால் சுகந்த் மஜும்தாரின் டுவிட்டுக்கு அம்மாநில திரிணாமுல் காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘ரூ.2,000 நோட்டு செல்லாததா? இந்த நோட்டை அறிமுகப்படுத்தியதும் பாஜக, இப்போது கேள்வி கேட்கிறது. ரூ. 2,000 நோட்டுகளை கொடுப்பது ஒன்றும் சட்டவிரோதமான ெசயல் அல்ல’ என்று தெரிவித்துள்ளார்.