சென்னை: விருதுநகர் மாவட்டம் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்; “விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆணையூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சிவகாசி வட்டம், மம்சாபுரம், இடையன்குளத்தைச் சேர்ந்த தங்கவேலு ப.வெள்ளைச்சாமி (65) மற்றும் கருப்பசாமி, பெ.பிச்சை (28) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன் என்று கூறியுள்ளார்.
மேலும் இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமமைனயில் சிகிச்சை பெற்றுவரும், கருப்பம்மாள், பெ.வடக்கத்தியான் என்பவருக்கு சிறப்பான சிகிக்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அவரது இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.