Monday, May 20, 2024
Home » எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு மையத்தில் உலக யானைகள் தினவிழா கொண்டாட்டம்

எம்.ஆர்.பாளையம் மறுவாழ்வு மையத்தில் உலக யானைகள் தினவிழா கொண்டாட்டம்

by MuthuKumar

திருச்சி: திருச்சி மாவட்டம், வனக்கோட்டம், எம்.ஆர். பாளையம் காப்புக்காட்டு பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் மத்திய விலங்கு காட்சியக ஆணையம் அனுமதியுடன் தமிழ்நாடு அரசு வனத்துறை கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த யானைகள் மறுவாழ்வு மையத்தில் சட்ட விரோதமாக வைத்திருந்த தனியார் யானைகளும், மற்றும் உரிய பராமரிப்பு இல்லாத கோயில் யானைகளையும் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் 9 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

யானைகள் மறுவாழ்வு மையத்தின் தலைமை வன உயிரின பாதுகாப்பு அலுவலர் உத்தரவின்பேரில் யானைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (12ம் தேதி) உலக யானைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் மற்றும் மாவட்ட வன அலுவலர் கிரண் அறிவுரையின்படி உதவி வன பாதுகாவலர் உதவி இயக்குனர் சம்பத்குமார் தலைமையில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.

இதில் வனச்சரக அலுவலர்கள் சுப்பிரமணியம், கோபிநாத், கிருஷ்ணன் தினேஷ்குமார், ரவி மற்றும் வன பணியாளர்களுடன் யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு உணவு, பழ வகைகள் படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. பின் யானைகளின் முக்கியத்துவத்தையும் பாதுகாப்பு மற்றும் வனத்திற்கான யானைகளின் பங்களிப்பை உணர்த்தும் விதமாக விழா கொண்டாடப்பட்டது.

இதுபோல் சிவபெருமானை யானை வழிபட்டு முக்தி பெற்ற திருத்தலமான திருச்சி திருவனைக்காவல் கோயிலில் யானைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு சுவாமிக்கு நடைபெறும் அனைத்து பூஜைகள், உற்சவங்களில் யானையை முன்னிறுத்தி வழிபாடு நடைபெறும். இத்தகைய சிறப்பு பெற்ற இக்கோயிலில் நேற்று உலக யானைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

அப்போது கோயில் யானை அகிலாவுக்கு திருச்சி தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் வாழைப்பழம், பேரீச்சம்பழம், ஆப்பிள் உள்ளிட்ட பல வகைகளை கொடுத்து மகிழ்ந்தனர். அப்போது அகிலாவிடம் சாப்பிட்டியா என குழந்தைகள் கேட்டபோது அது தலையசைத்தது குழந்தைகளிடைய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

one × 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi