பெங்களூரு: “கிரிப்டோ கரன்சியை ஒழுங்குபடுத்த உலக நாடுகளின் கூட்டு முயற்சி தேவை,” என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பெங்களூருவில் நடந்த விழாவில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று பேசியதாவது: ஜி-20 மாநாட்டில் கிரிப்டோகரன்சியை ஒழுங்குபடுத்தும் கருத்தை இந்தியா முன்மொழிந்துள்ளது. கிரிப்டோகரன்சி முற்றிலும் டிஜிட்டல் அடிப்படையில் உருவாக்கப்பட்டு தொழில்நுட்பத்தினால் செயல்படுத்தப்படுகிறது. அதனை யார் வெளியிடுகிறார்கள் என்பதை கண்டறிவதில் மிகுந்த சிரமங்கள் உள்ளன. இதனை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் அனைத்து நாடுகளும் இணைந்த கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.
கிரிப்டோ கரன்சியை ஒழுங்குபடுத்த இந்தியா மட்டும் முயற்சித்தால் போதாது. உலக நாடுகளின் ஒருமித்த கருத்து இல்லாமல் கிரிப்டோ கரன்சியை ஒழுங்குபடுத்துவது என்பது பயன் அளிக்காது. எந்தவொரு நாடும் முழுவதும் தொழில்நுட்பங்களை கொண்டு வெளியிடும் கிரிப்டோ கரன்சியை திறம்பட கட்டுப்படுத்துவது சாத்தியமற்றது. இதனால் கிரிப்டோகரன்சியை ஒழுங்குபடுத்துவதற்கு உலக நாடுகளின் ஒன்றிணைய வேண்டும் என்றார்.