கெய்ரோ: லிபியாவில் அகதிகளை ஏற்றி சென்ற படகு கடலில் மூழ்கிய விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா நாடுகளில் நிலவும் வறுமை, வன்முறை, அரசியல் சூழல்கள் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் ஐரோப்பா உள்ளிட்ட பிற நாடுகளில் குடியேறும் எண்ணத்தில் வௌியேறி வருவது தொடர்கதையாக நீடிக்கிறது. இவர்கள் இத்தாலி வழியே கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக ஐரோப்பா செல்ல துனிசியா, லிபியா முக்கிய பகுதிகளாக உள்ளன. அதிகளவிலான பயணிகளை ஏற்றி செல்வது, பழுதடைந்த படகுகள், மோசமான வானிலை போன்ற காரணங்களால் படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் லிபியாவின் வடமேற்கு கரையின் ஜூவாரா நகரில் இருந்து காம்பியா, நைஜிரியா நாடுகளை சேர்ந்த 86 பேரை ஏற்றி கொண்டு படகு ஒன்று ஐரோப்பாவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த படகு நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது பாரம் தாங்காமல் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு பெண், குழந்தை உள்பட 61 அகதிகள் பலியாகி விட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்பு குழுவினர் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.