புழல்: புழல் திருநீலகண்ட நகர் 5வது தெரு சேர்ந்தவர் பாலாஜி(40). இவர் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் இரவு செங்குன்றம் அடுத்த கிரான்ட் லைன் செல்வ விநாயகர் நகர் பகுதியில் உள்ள குடிநீர் கிணறு அருகே மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது உடன் மது அருந்திய நண்பர்கள் பாலாஜியை தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டனர். பின்னர், நேற்று காலை குடிநீர் கிணற்றில் பாலாஜி சடலமாக இருந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் செங்குன்றம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில், செங்குன்றம் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பாலாஜி புழல், செங்குன்றம், மாதவரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி வழக்குகளில் கைதாகி சிறைக்கு சென்றவர் என தெரியவந்தது.