புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தில் தற்போதைய நிலையே தொடரும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதிகரித்து வரும் பணவீக்கம் காரணமாக அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதத்தை அண்மையில் 0.25 சதவீதமாக உயர்த்தியது. கடந்த 16 ஆண்டுகளில் பெடரல் வங்கி அறிவித்த கடன் விகிதங்களில் இதுவே மிகவும் அதிகம் என்று கூறப்படுகிறது. இதேபோல் ஐரோப்பிய மத்திய வங்கியும் கடனுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 8 – 10ம் தேதிகளில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தலைமையில் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதம் உயர்த்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தில் தற்போதுள்ள நிலையே தொடரும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாங்க் ஆப் பரோடாவின் தலைமை பொருளாதா நிபுணர் மதன் சப்னவிஸ் கூறும்போது, “3வது காலாண்டில் பணவீக்கம் 5.4 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது. தற்போது பணவீக்கம் 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ள நிலையில் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு இல்லை” என்றார். கோட்டக் மகிந்திரா வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் உபாஸ்னா பரத்வாஜ் கூறியதாவது, “ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறும் அறிவிப்புக்கு பிறகு பணப்புழக்கம் நிலைமைகள் சாதகமாகி விட்டன. இதனால் வட்டி விகித கொள்கை நிலைப்பாட்டில் தற்போதுள்ள நிலையையே ரிசர்வ் வங்கி தொடரும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.