சென்னை : ஆளுநர் பொறுப்பிற்கே களங்கம் விளைவிக்கும் வகையில் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திவைத்துள்ளார். இது தொடர்பாக ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்க ஆளுநர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.ஆளுநரின் இந்த செயலுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,
“சட்டம், ஒழுங்கை சீர்குலைத்து, அரசியலமைப்பு சட்டத்திற்கு நெருக்கடி உருவாக்கக் கூடிய பல முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் ஆளுநர் ரவி.ஆளுநர் ரவி எந்த முடிவையும் நிலையாக எடுக்காமல், குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்; அவரின் பொறுப்பிற்கும், செயல்பாட்டிற்கும் தொடர்பில்லாத வகையில் நடந்து கொள்கிறார்; ஆளுநர் பொறுப்பிற்கே களங்கம் விளைவிக்கும் வகையில் அவரது செயல்பாடுகள் உள்ளன; உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். ஆளுநர் பதவி விலகாவிட்டால் அவரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்,’என்றார்.