சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கை; கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி தாலுகா, புலியாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன், 5 பெண்கள் உட்பட 9 குறவர் இன மக்களை கடந்த 11.6.2023 அன்று இரவு சித்தூர் காவல்துறையினர் கடத்திச் சென்று ஒருவார காலமாக அடைத்து வைத்து அடித்து, இரண்டு பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்து, கொடூரமாக சித்திரவதை செய்துள்ளனர். இச்சம்பவம் அறிந்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் குறவன் பழங்குடியின சங்கத்தினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், வழக்கறிஞர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஊத்தங்கரை துணை கண்காணிப்பாளர் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவர்களை மீட்க வலியுறுத்தியதின் அடிப்படையில் அழைத்துச் சென்ற 7 பேர்களில் மூன்று பெண்கள் ஒரு சிறுவன், ரமேஷ் ஆகியோரை மட்டும் சித்தூர் காவல்துறையினர் கிருஷ்ணகிரி மத்தூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். ஐயப்பன் மற்றும் பூமதி ஆகியோரை விடுவிக்கவில்லை. குற்றமிழைத்த காவலர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம், பாலியல் வல்லுறவு, சித்தரவதைக்குள்ளாக்குதல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடுமையான தண்டனை பெற்று தருவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.