சென்னை: ராப் இசைக் கலைஞர் தேவ் ஆனந்த் சென்னை அருகே வேலப்பன்சாவடியில் மர்மநபர்களால் கத்திமுனையில் கடத்தப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்தவர் தேவ் ஆனந்த். ராப் இசைக் கலைஞரான இவர், நேற்றைய தினம் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹாலில் வேல்ட் மியுசிக் டே நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார். இவருடன் 3 நண்பர்கள் காரில் வந்துள்ளனர். வாகனமானது மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென இருசக்கர வாகனம் ஒன்று காரின் மீது மோதியுள்ளது.
இதனால் தேவின் நண்பர் கீழே இறங்கி வாகனத்தின் சேதம் குறித்து பார்த்துள்ளார். அச்சமயம் மற்றொரு காரில் எதிரே வந்த 10 பேர் கொண்ட கும்பல் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தேவ் ஆனந்தை கடத்தி சென்றுள்ளனர். இதனால் பதற்றமடைந்த தேவ் ஆனந்தின் நண்பர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர்.
உடனடியாக தேவ் ஆனந்த் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது தனது அண்ணன் வாங்கிய ரூ.2.50 கோடி கடனுக்காக தான் தன்னை கடத்தியிருப்பதாக கூறியுள்ளார். மேலும் கடத்தல்காரர்கள் தன்னை நல்ல நிலையில் வைத்திருப்பதாக ராப் இசைக் கலைஞர் தேவ் ஆனந்த் தெரிவித்திருக்கிறார். இருப்பினும் கத்தி முனையில் ராப் இசை கலைஞர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காடு காவல்துறையினர் சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து தேவ் ஆனந்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.