ராமநாதபுரம்: நெடுந்தீவு அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த வார முதல் தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். இந்த நிலையில், நெடுந்தீவு அருகே ஆழ்கடலில் தமிழக மீனவர்கள் நேற்று இரவு மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை சிறைப்பிடித்து சென்றது.
மேலும் 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 21 பேரும் ராமேஸ்வர பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மீன்பிடித் தடைக்காலம் முடிந்து தற்போது தான் மீனவர்கள் கடலுக்குச் சென்ற நிலையில், இலங்கை கடற்படையின் இதுபோன்ற தொடர் அச்சுறுத்தலால் தமிழக மீனவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.