மண்டபம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை நீதிமன்றம் நிபத்தனையுடன் நேற்று விடுதலை செய்தது. ராமேஸ்வரம் துறைமுகம் கடலோரப் பகுதியில் இருந்து கடந்த 20ம் தேதி மீன் பிடிக்க சென்ற மோகன், மகத்துவம் ஆகியோரின் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். மேலும், படகிலிருந்து நிக்சன், முத்துராமலிங்கம், முனியசாமி, ஜஸ்டின் திரவியம், கோவிந்தன், முனியராஜ், ஆரோக்கயராஜ் ஆகிய 7 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நேற்று 7 மீனவர்களையும் போலீசார் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த நீதிபதி மீண்டும் 5 ஆண்டுகளுக்குள் கைதானால் ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என நிபந்தனைகளுடன் 7 மீனவர்களையும் விடுவித்து உத்தரவிட்டார். விடுதலையான 7 மீனவர்களும் ஒரு சில வாரத்தில் ராமேஸ்வரம் பகுதிக்கு வந்து சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.