Sunday, September 1, 2024
Home » இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது: ஒடிசாவை சேர்ந்த 2 பேரும் சிறைபிடிப்பு

இலங்கை கடற்படை தொடர்ந்து அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது: ஒடிசாவை சேர்ந்த 2 பேரும் சிறைபிடிப்பு

by Ranjith

ராமேஸ்வரம்: பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்ட 17 ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 2 பேர் உட்பட 19 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இரவு பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் படகுகளை வேறு பகுதிகளுக்கு ஓட்டிச் சென்றனர்.

மீனவர்களை துரத்திச் சென்ற இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தை சேர்ந்த அலெக்ஸ், அண்டன் சசிக்குமார் ஆகியோரின் 2 விசைப்படகுகளை சிறைபிடித்தனர். படகில் இருந்த ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஜால்சன் (42), மெக்டன் (40), பிஸ்மர் (26), முனியசாமி (36), சேகர் (49), சேசு ராஜா (41), முனியசாமி (48), பிளவர்சன் (28), பிரசாந்த் (32), ஆரோக்கிய பிரபாகரன் (47), செல்வ தாமஸ் (50), செல்வராஜ் (46), அண்டன் சசிகுமார் (43), முனியசாமி, ஆரோக்கியம் (50), ஆஸ்வால்டு (36), பிராங்க்ளின் (36) மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 19 பேரை கைது செய்தனர்.

இவர்களை இரவிலேயே காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று கடற்படை உயரதிகாரிகள் விசாரணை செய்தனர். இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இருவரிடமும் மீனவர் அடையாள அட்டை இல்லை. இருவரையும் இலங்கையில் இறக்கி விடுவதற்காக படகில் அழைத்து வந்தார்களா? இல்லை மீன்பிடிக்க கூலியாட்கள் கிடைக்காமல் படகில் ஏற்றி வந்தார்களா என அதிகாரிகள் விசாரணை செய்தனர். ஆனால் இருவருக்கும் ஒடிசா மொழி தவிர வேறு மொழி தெரியாததால் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த 3ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை கைது செய்த நிலையில், தற்போது 19 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்களுடன் ஒடிசா மீனவர்களும் சென்றது குறித்து மீன்வளத்துறை டோக்கன் வழங்கும் அதிகாரி, அவர்கள் சென்ற படகை சார்ந்த சங்கத்தின் கணக்குப்பிள்ளை ஆகியோரிடம் புலனாய்வு துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

two × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi