பெங்களூரு: ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு குற்றவாளியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள என்.ஐ.ஏ, குற்றவாளி குறித்த துப்பு கொடுப்பவருக்கு ₹10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1ம் தேதி மதியம் ஒரு மணியளவில் 2 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள து.
தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்து வந்த நபர் ஒருவர் தான் குண்டு வைத்திருப்பார் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குற்றவாளியின் முகம் தெளிவாக தெரியும் வகையிலான சிசிடிவி காட்சியும் சிக்கியது. அந்த புகைப்படத்தை வெளியிட்டு, அந்த நபர் குறித்து துப்பு கொடுப்பவருக்கு ₹10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று என்.ஐ.ஏ அறிவித்துள்ளது.
குற்றவாளியை நெருங்கி விட்டோம்…
இந்நிலையில், குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக பேசிய மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், ’ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியை நமது அதிகாரிகள் நெருங்கிவிட்டனர். கடந்த 2 நாட்களில் சில முக்கியமான துப்புகள் கிடைத்திருகின்றன. அவற்றை மிகவும் தீவிரமாக எடுத்து போலீசார் செயல்படுகின்றனர். இதே வழியில் விசாரணையை தொடர்ந்தாலே, இன்னும் மிக விரைவில் இந்த விசாரணை முடிவடைந்துவிடும்’ என்று பரமேஸ்வர் கூறினார்.