சென்னை: பாமகவின் தமிழைத்தேடி இயக்கம் சார்பில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று தமிழகத்தின் பல இடங்களில் தமிழில் பெயர்ப்பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று ராஜா அண்ணாமலைபுரம் 3வது குறுக்குத் தெருவில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் மூன்று கடைகளின் தமிழ் பெயர் பலகைகளை பாமக நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார். அப்போது, அவர் கூறுகையில், ‘‘நாம் எந்த மொழிக்கும் விரோதிகள் அல்ல. திருமணங்களை தமிழில் நடத்த வேண்டும். தமிழை மறந்தால் வாழ முடியாது. நாம் நன்றாக வாழ தமிழை வளர்க்க வேண்டும். வணிகர்கள் நினைத்தால் தமிழை வளர்க்க முடியும், தமிழை காப்பாற்றும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. தமிழை காப்பாற்ற ஒரு முயற்சியாக தமிழ் பெயர் பலகைகளை திறந்து வைத்துள்ளோம்’’ என்றார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மற்றும் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயலாளர்கள், பகுதி செயலாளர் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.