சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ பிப்ரவரி 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தையும் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. இந்த போராட்டம் தடுக்கப்பட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும், வேலை நிறுத்தப் போராட்டத்தையும் பாமக ஆதரிக்கிறது.
அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு உடனடியாக பேச்சு நடத்த வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் வேலைநிறுத்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.