அயோத்தி: ராம நவமி நாளான நேற்று அயோத்தி ராமர் கோயிலில் பால ராமரின் நெற்றியில் சூரிய ஒளி நேரடியாக திலகம் போல் விழுந்ததை தனது டேப்லெட் மூலம் பிரதமர் மோடி தரிசித்தார். ராம நவமி நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. ராமர் பிறந்த நாளாக கருதப்படும் இந்நாளில் அயோத்தி ராமர் கோயிலில் உள்ள பால ராமரின் முன்நெற்றியில் சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக திலகம் போல் விழுவதற்கான ஏற்பாடுகள் கோயில் கட்டுமானத்தின் போதே செய்யப்பட்டிருந்தன.
இந்திய வான் இயற்பியல் நிறுவனத்துடன் இணைந்து ரூர்கேயில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழக விஞ்ஞானிகள் கண்ணாடி மற்றும் லென்ஸ் மூலம் சூரிய ஒளி, ராமர் கோயிலின் 3வது மாடியில் இருந்து பெறப்பட்டு குழாய் வழியாக நேரடியாக ராமரின் நெற்றியில் விழும்படியாக செய்யப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 12 மணிக்கு சூரிய ஒளி கதிர்கள் திலகமாக ராமரின் நெற்றியில் விழ வைக்கப்பட்டது. இதன் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின. அசாமில் பிரசாரத்திற்காக ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்த பிரதமர் மோடி, தனது டேப்லெட் மூலம் சூரிய திலகத்தை தரிசித்தார்.
இது குறித்து அவர் தனது டிவிட்டரில், ‘‘நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்களைப் போல எனக்கும் இது உணர்ச்சிபூர்வமான தருணம். இந்த சூரிய திலகம் நமது வாழ்வில் ஆற்றலையும், நமது சேதம் பெருமையின் புதிய உச்சங்களை அடைய ஊக்கம் தரட்டும்’’ என்றார்.