Saturday, July 27, 2024
Home » ராமர் கோயிலை அரசியல் திட்டமாக மாற்றிய பாஜக.. குடமுழுக்கு விழாவை நிராகரித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, கார்கே!!

ராமர் கோயிலை அரசியல் திட்டமாக மாற்றிய பாஜக.. குடமுழுக்கு விழாவை நிராகரித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, கார்கே!!

by Nithya

டெல்லி: ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே நிராகரித்துள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்படும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி, அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், சாதுக்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்கவுள்ளனர். ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு செல்லப்போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணிக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி முடிவு செய்திருப்பதாக செய்திகள் பரவின. ராமர் கோயில் விஷயத்தில் பாஜக அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பை சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நிராகரித்துள்ளனர். அயோத்தி ராமர் கோயில் என்பது பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் திட்டம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் செய்தி தொடர்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;

மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் விழாவில் கலந்து கொள்ள மாட்டார். நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் ராமரை வழிபடுகின்றனர்; மதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம். ராமரை வழிபடும் மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில், ஆர்.எஸ்.எஸ்., பாஜக நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. கோயில் இன்னும் கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் போதே தேர்தல் ஆதாயத்துக்காக திறப்பு விழா நடத்த துடிக்கிறார்கள். அயோத்தி ராமர் கோயிலை அரசியல் திட்டமாக ஆர்.எஸ்.எஸும், பாஜகவும் மாற்றிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

seven − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi