வேலூர் : சென்னை மற்றும் புறநகர் பகுதியில் விடிய விடிய மழை பெய்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கனமழை கொட்டி தீர்த்தது. அடையாறு, பட்டினம்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், கிண்டி, வேளச்சேரி, வடபழனி ஆகிய இடங்களிலும் தாம்பரம், குரோம்பேட்டை, சேலையூர், பெருங்களத்தூர், முடிச்சூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு மழை கொட்டியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. விருதுநகர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலாண்டு தேர்வுகள் நடைபெறுவதால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் காலை முதலே லேசான மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்று மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.