நீலகிரி: ரயில் பாதையில் ராட்சத பாறைகள் விழுந்துள்ளதால் மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. குன்னூர் மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் 4க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
நேற்று நீலகிரி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையின், மலை ரயில் பாதை சரிவுப்பகுதியில் கனமழை பெய்தது. கல்லார் பகுதியிலிருந்து ஹில்குரோ ரயில் நிலையம் வரை நேற்று இரவு அதிக கனமழை பெய்துள்ளது.
இதே போல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. ஆனால் கனமழை காரணமாக எந்தவித பாதிப்பும் அப்பகுதியில் ஏற்படவில்லை. மலை ரயில் பாதை, மலை பகுதிகளில் அமைந்துள்ளதால் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் மண் – பாறைகள் ரயில் பாதையில் சரிந்து விழுந்துள்ளது.
இதன் காரணமாக இன்று மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 7.10 மணிக்கு மலை ரயில் புறப்பட தயாராக இருந்துள்ளது. ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு, பாறைகள் விழுந்து சேதமான காரணத்தால் மேட்டுப்பாளையம் – உதகை செல்லும் மலை ரயில் இன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.